சௌவியதாசன், பாறுக் ஷிஹான்
சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு, விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று கையெழுத்து சேகரிப்பு மற்றும் கவனயீர்ப்பு மன்றாட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.
சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்தொன்றைத் தொடர்ந்து அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் ஆரம்பத்தில் ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மேன்முறையீட்டின் அடிப்படையில் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும், இலங்கை வெளிவிவகார அமைச்சு இதுவரை எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பைப் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த மக்கள் கவனயீர்ப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து மனிதாபிமான அடிப்படையில் நற்பிட்டிமுனை மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து, அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு வருகின்றனர்.
“ஒரு உயிரைக் காப்போம்; மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கையின் மூலம், அனோஜனின் குடும்பத்தினருக்கு ஆதரவையும், உரிய அதிகாரிகளுக்கு அவசரமான நடவடிக்கைக்கான வேண்டுகோளையும் மக்கள் வெளிப்படுத்தினர்.
இலங்கை வெளிவிவகார அமைச்சும் சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புகளை மேற்கொண்டு, அனோஜனின் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்களம்,தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் பொது அமைப்புகளும் பொதுமக்களும் இலங்கையராக அனுஜனின் விடுதலைக்கான முன்னெடுப்புக்களை நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



















