“அறிவை விதைத்து அறிவொளி ஏற்றும் ஆசான்களை வாழும் போதே வாழ்த்துவோம்” எனும் தொனிப்பொருளில், அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் 2004ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் கௌரவிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை (19.09.2026) கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில், பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. K. இரத்தினவேல் அவர்களுடன் இணைந்து ஓய்வுபெற்ற மற்றும் கற்பித்த ஆசிரியர்களான திரு. J.R. டேவிட் அமிர்தலிங்கம், திரு. V. கிருபாகரன், திரு. S. சோமசுந்தரம், திருமதி. சோதிமலர் தங்கவடிவேல், திரு. S. தேவசிகாமணி, திரு. T. ஜெயராஜ் மற்றும் திரு. M. ஜெசிம் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
மங்கள விளக்கேற்றல் மற்றும் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகும் நிகழ்வில் வரவேற்புரை, தலைமையுரை, சிறப்புரை என்பன இடம்பெறவுள்ளன. அத்துடன் மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் சிவ தாண்டவ நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் அரங்கேறவுள்ளன.
தொடர்ந்து, தமக்குக் கல்வியூட்டி நல்வழிப்படுத்திய ஆசான்களுக்கு 2004 கலைப்பிரிவு மாணவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி மதிப்பளிக்கவுள்ளனர். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில் மாணவர்களின் அனுபவப் பகிர்வு, ஆசிரியர்களின் ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெறும்.