September 16, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > ஜனாதிபதியின் அவசர வர்த்தமானி வெளியீடு: பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

ஜனாதிபதியின் அவசர வர்த்தமானி வெளியீடு: பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழ்நிலையை முன்னிட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், ஜனாதிபதி Anura Kumara Dissanayake வியாழக்கிழமை (28) இரவு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இந்த உத்தரவு அரசாங்க திணைக்களங்கள், அரசுக்குச் சொந்தமான கூட்டுத்தாபனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் செயல்படும் சேவைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளவற்றில் மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம், குடிநீர் மற்றும் வடிகாலமைப்புச் சேவைகள், பொதுப் போக்குவரத்து, ரயில் மற்றும் விமான நிலைய சேவைகள், துறைமுக நடவடிக்கைகள், மருத்துவ மற்றும் சுகாதார சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

மேலும் தொலைத்தொடர்பு மற்றும் ஊடகச் சேவைகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட களமட்ட அரச சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் அரச வங்கி மற்றும் காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி மன்றங்களின் துப்புரவு மற்றும் கழிவு முகாமைத்துவ சேவைகள்,

நீர்ப்பாசனம், காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி சேவைகளும் இந்த அறிவிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.