( வி.ரி.சகாதேவராஜா)
விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி (Vivekananda College of Technology) மற்றும் மனித நேயம் அறக்கட்டளை (Manitha Neyam Trust) இணைந்து ஏற்பாடு செய்த “சான்றிதழ் வழங்கும் விழா – 2026” கடந்த (12) சனிக்கிழமை காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் சாரதா நலன்புரி நிலையத்தில், விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே. பிரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவிப்பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி உமாதீஷானந்தா ஜி மகராஜ் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ விருந்தினர்களாக யூகே. மனித நேயம் அறக்கட்டளையின் தலைவி திருமதி அபிராமி கைலாசபிள்ளை, அறங்காவலர் கைலாசபிள்ளை அரவிந்தன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம், வாழ்க்கைத்திறன் உள்ளிட்ட பல்வேறு திறன் மேம்பாட்டு மற்றும் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 47 மாணவர்களுக்கு இந்நிகழ்வின்போது சான்றிதழ்கள் மற்றும் இராமகிருஷ்ண மிஷன் நூல்கள் வழங்கப்பட்டன.
“திறன் மேம்பாடு மற்றும் கல்வியின் ஊடாக சமூகங்களை வலுப்படுத்துதல்” என்ற தொனிப்பொருளில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.









