நிந்தவூர் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவில் ஆதம்பாவா எம் பி புகழாரம்.
செல்லையா பேரின்பராசா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீன் ஒர் இரும்புப் பெண்மணி. அவருடைய தலைமையில் கல்முனை பிராந்தியம் சுகாதார துறையில் வளர்ச்சி கண்டு வருவது பாராட்டுக்குரியது.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா எம் பி தெரிவித்தார்.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய டாக்டர் ஏ. பி. மசூத்தின் சேவையை பாராட்டியும், புதிய வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சியாத்தை வரவேற்றும் நடாத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா,
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரேரணை இந்த வாரம் பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இந்த பிரேரணைக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருந்து அதற்காக முழு மூச்சுடன் செயற்பட தயாராக உள்ளோம்.
இந்த பிரேரணையை இன்று கொண்டு வருபவர்கள் அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது அதனை மறந்த நிலையில் செயற்பட்டமை வேதனைக்குரியதாகும் என தெரிவித்தார்.
பாலமுனை பூட்பாக்கில்05.09.2026 மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் எம் எல் சம்சுன் அலி, நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ. இப்திகார் அஹமட் , உட்பட பலரும் கலந்து கொண்டனர்

