ஜனாதிபதித் தேர்தலுக்குச் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனின் பெயரில் நேற்று வெள்ளிக்கிழமை (20.09.2024) இரவு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அன்பார்ந்த தமிழ் வாக்காளப் பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம். இம்மடல் மூலம் திறந்த பேச்சு எனத் தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள குறித்த துண்டுப் பிரசுரத்தில் முதல் வாக்கை சஜித் பிரேமதாசாவின் ரெலிபோன் சின்னத்திற்கும், இரண்டாவது வாக்கைத் தமிழ்த்தேசியத்திற்காகச் சங்குச் சின்னத்திற்கும் அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழரசுக் கட்சியில் சஜித் பிரமதாசாவை ஆதரிக்கும் ஒரு கும்பல் தயாரித்த துண்டுப் பிரசுரமே குறித்த துண்டுப் பிரசுரம் எனவும், இது என்னால் வெளியிடப்படவில்லை எனவும் தமிழ்ப்பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இப்படி நடக்கும் என்பதை நான் ஏற்கனவே கூறியிருந்தேன் எனச் சுட்டிக் காட்டியுள்ள அவர் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை மக்கள் உணர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்