‘நமக்காக நாம்’ பிரசார பயணத்தின் போது தமிழ்ப் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.


சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும் ‘நமக்காக நாம்’ பிரசார
பயணம் கிழக்கு மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


திருகோணமலை மாவட்டத்திற்கான பரப்புரை நடவடிக்கைகளுக்காக சென்ற தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு எல்லைக்கிராமமான திரியாய் பகுதியில் வைத்து சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.


மாவட்டத்தின் எல்லையில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழ் இன உணர்வாளர்களின்வரவேற்ப்புடன், திருகோணமலை மாவட்டத்திற்கு தமிழ்ப் பொது வேட்பாளர் வரவேற்கப்பட்டு பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டார். இதன்
போது வாகனப் பேரணியாக இளைஞர்கள் எழுச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்றிருந்தனர்.


கும்புறுப்பிட்டி கிராமத்தில் இடம்பெற்ற திருகோணமலைமாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த யதீந்திரா உள்ளிட்ட பிரமுகர்களும்
அப்பகுதி பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று உரைகளை ஆற்றியிருந்தனர்.


இதன்போது நூற்றுக்கணக்கான பொது மக்கள் பங்கேற்று தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.