காரைதீவு சகா

எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எனது பூரண ஆதரவினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு வழங்குவதாக முடிவெடுத்துள்ளேன் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான முருகேசு இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போட்டியிடுகின்ற பிரதான நான்கு வேட்பாளர்களையும் ஒப்பிடுகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெல்வது நாட்டுக்கும், மக்களுக்கும் சாதகமாகும்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் படும் துன்பங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல, தொடர்ச்சியாக எமது மக்களை ஏமாற்றிக்கொண்டு ஒரு சில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயலாபங்களை அடைந்தவையே மிச்சம்.

எல்லா மாவட்டங்களையும் ஒப்பிடும் போது அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்கள் அனைத்தும் பின் தங்கியே காணப்படுகின்றன .

எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை தாங்களே ஆள வேண்டும். அவர்களுக்கான சகல விதமான முடிவுகளையும் அவர்களே எடுக்க வேண்டும் .எதிர்வர இருக்கின்ற தேர்தல்களில் அவ்வாறு இருந்தால் மாத்திரமே இளைஞர்களின் தொழில் வாய்ப்புகளும் சரி, அபிவிருத்தியிலும் சரி, கொள்கையிலும் சரி, எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லாமல் சிறந்த முடிவுகள் எட்டப்படும்.

ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு நமது மக்களுக்கான வாய்ப்பாக நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்துவதை எதிர்பார்க்கின்றேன்.


கடந்த பல்லாண்டு காலமாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் இன்னோரன்ன பிரச்சனைகள் ஜனாதிபதி ரணில் காலத்தில் தீர்த்து வைக்கப்படும்.

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து பேசிய கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

.

இதேவேளை
இச் சந்திப்பு தொடர்பாக மு.இராஜேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

இந்த சந்திப்பில் ஜனாதிபதியிடம் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பாக பேசியிருந்தேன் . நான் மாகாண சபை உறுப்பினராக இருந்த போது நாவிதன்வெளி சம்மாந்துறை கல்முனை வலய தமிழ் பாடசாலைகளை உள்ளடக்கிய கல்முனை வடக்கு கல்வி வலயம் உருவாக வேண்டியதன் அவசியம் கருதி பல முன்னெடுப்புக்களை செய்திருந்தேன். அதனை நிவர்த்தி செய்து தரவேண்டும் எனும் கோரிக்கையையும் முன்வைத்தேன். பட்டதாரிகளுக்கு நேரடியாக தொழில் வழங்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, நாவிதன்வெளி , காரைதீவு பிரதேச தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் விபரித்திருந்தேன். அதனை ஜனாதிபதி கவனமாக செவிமடுத்தார்

அதேவேளை
ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் நாடாளுமன்ற தேர்தல் , மாகாணசபை தேர்தல்களை எதிர்கொள்ளும் போது தமிழ் கட்சிகள் வாக்குகளை பிரிக்காது அனைவரும் தமிழரசுக்கட்சி உட்பட ஒன்றிணைந்து விட்டுக்கொடுப்புடன் ஒரு சின்னத்தில் போட்டியிட்டு ஆசனங்களை பாதுகாக்க வேண்டும்.

நான் மாகாணசபை உறுப்பினராக இருந்த போது முடிந்தவரை பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளேன், ஆனால் ஏனயை மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான தேவைகள் ,பிரச்சனைகள், அபிவிருத்திகளுக்கு தற்போதுவரை தீர்வின்றியே உள்ளன. ஜனாதிபதியுடனான சந்திப்பில் பல விடயங்களை விபரித்திருந்தேன் சாதகமான பதிலை தந்தார் என்றார்