சமூகத்தில் காணப்படும் உளவியல் சார் சமூகப் பிரச்சனைகளை கையாள்வதற்கு சமூக மட்ட களப்பணியாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் சேவைகளை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பம் – மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், Dr. R.முரளீஸ்வரன்

”தற்கொலை, பாலியல் அடிப்படையிலான வன்முறை, மது மற்றும் போதைவஸ்து பிரச்சினைகள், இளவயதினர்களுக்கான பிரச்சனைகள், மூட நம்பிக்கைகளை போன்று சமூகத்தில் காணப்படும் உளவியல் சார் சமூகப் பிரச்சனைகளை கையாள்வதற்கு சமூக மட்ட களப்பணியார்கள் மூலம் சேவைகளை வழங்குவது சிறந்த நடைமுறையாகும்” என சமூகமட்டத்திற்கான உளச் சுகாதாரத்தினை மேம்படுத்தும் களப் பணியாளர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 28.08.2024 புதன்கிழமையன்று பிராந்திய சுகாதார பணிமனையின் Dr. சதுர்முகம் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இரா. முரளீஸ்வரன் உரையாற்றுகையில்,

“இவ்வாறான பயிற்சிகளின் மூலம் உளசமூக மட்டத்திலான பிரச்சனைகளை முன்கூட்டியே இனம் கண்டு அவற்றிக்கான சிகிச்சைகளையும் ஆலோசனைகளும் வழங்குவதோடு பாதிப்படைந்தோர்களின் மீது தொடர் கண்காணிப்பு சேவையை வழங்கி எதிர்காலத்தில் சமூகம் ஆரோக்கியம் மற்றும் நோயாளர்களுக்கான பாதுகாப்பையும் மேம்படுத்த முடியும்.”
,
இந்த நோக்கங்களை இலகுவாக்குவதற்காக, ”இப்பயிற்சியின் பயனாளர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுடனும் இணைக்கப்பட்டு களப்பணிகளில் சமூக மட்ட சேவைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்” என தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உளநல களப் பணியாளர்கள் (MHFW) மற்றும் பகுதி நேர சமூக உளநல தாதிய உத்தியோகத்தர்களுக்கு இரண்டு மாத கால, பகுதி நேரப் பயிற்சியாக குறித்த பயிற்சி நெறி நடைபெற்றிருந்தது.

மட்டக்களப்பு பிராந்திய உள நல பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. டான் சௌந்தரநாயகம் ஒருங்கிணைப்புச் செய்திருந்த இப்பயிற்சி நெறிக்கான அனுசரணையை சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் IMHO – USA (International Medical Health Organization) வழங்கியிருந்தது.


இந் நிகழ்வில் இதில் சமூக குழந்தை நல நிபுணர் வைத்திய கலாநிதி பிரார்த்தனா, உட்பட பிராந்திய வைத்திய அதிகாரிகள், பிராந்திய சுகாதார உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.