இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கே அனுப்பப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இவ்வாறான சர்ச்சைகளுக்கு பதில் வழங்கும் முகமாக இன்றைய தினம் (28) நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர்,

“பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலகத்தால் இவ்வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

இதற்கு உதவியாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்திக்காக முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன.

இக்கோரிக்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு தொகைகள் ஜனாதிபதி செயலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இப்பணங்கள் மேற்சொன்ன அபிவிருத்தி பணிகளுக்காக நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நேரடியாக கொடுக்கப்படவில்லை.

அண்மை காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தவறான விஷமப்பிரசாரங்கள் காரணமாகவே இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.