எமது மக்களின் கருத்துகளோடு சேர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலையரசன்)

எமது மக்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். எமது மக்களின் இருப்புகளைப் பாதுகாக்க வேண்டும். இந்த சிந்தனையோடு நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது மக்களின் கருத்துகளோடு சேர்ந்து செயற்பட வேண்டியது அவசியமானதாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக மேற்கொள்ளப்படும் ஆலையடிவேம்பு வம்மியடிப் பிள்ளையார் ஆலய அன்னதான மடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் இன்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஒரு தேர்தலை அண்டிய ஒரு கால சூழல் இருக்கின்றது. எங்களுடைய தமிழ் மக்கள் சார்பிலே பல கேள்விகள், பல பிரச்சனைகள் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் எழுந்து கொண்டிருக்கின்றன. எங்களுடைய தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை நீண்ட காலமாக ஏற்று அதனை ஆதரித்து வாக்களித்து வருகின்றார்கள். தற்காலத்தில் இந்த நாட்டில் இருக்கின்ற பொருளாதாரப் பிரச்சனை, தமிழ் மக்கள் ரீதியான பிரச்சனை என்ற விடயங்களில் நாங்கள் ஒரு இக்கட்டான ஒரு நிலைமையைச் சந்தித்தவர்களாக இருக்கின்றோம்.

இந்த அடிப்படையில் பிரதானமான மூன்று கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வடகிழக்கு இணைப்பு பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அவர்கள் தேர்தல் காலம் முடிந்த பிறகு எம்மை ஏமாற்றி விடுவார்களோ என்ற அச்சம் அனைவர் மத்தியிலும் இருக்கின்றது. இந்த அரசியலை நாங்கள் நீடித்துச் செல்லவும் அனுமதிக்க முடியாது.

ஏனெனில் எமது மக்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். எமது மக்களின் இருப்புகளைப் பாதுகாக்க வேண்டும். இந்த சிந்தனையோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். மறுபக்கம் பொது வேட்பாளர் என்ற விடயததிலும் எமது கட்சி ரீதியாக ஒரு முடிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை. என்னைப் பொருத்தவரையில் மக்கள் எந்த முடிவுடன் இருக்கின்றார்களோ அந்த முடிவினையே நாங்களும் தீர்மானிப்போம்.

அம்பாறை மாவட்டத்தைப் பொருத்தவரையில் நாங்கள் இரு சமூகங்களாலும் நசுக்கப்படுகின்ற ஒரு இனமாக தற்போது வரை இருந்து கொண்டிருகக்கின்றோம். அந்தத் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் நாங்கள் தவிக்கின்றோம். அதன் வலிகள் எமக்குத் தான் தெரியும். இந்த அடிப்படையில் எதிர்காலச் செயற்பாடுகளை நாங்கள் திட்டமிட்டு எமது மக்களின் கருத்துகளோடு சேர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாக இருக்கின்றது