திருக்கோணேச்சரம் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கடைகள் கோவிலின் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிப்பதற்கு தடையாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (06.08.2024) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விரிவாக கூறுகையில்,

“திருக்கோணேச்சரம் வரலாற்று புகழ்மிக்க ஒரு புனிதத் தலம். இக்கோவிலுக்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்கள் இந்த இடத்தின் அழகைக் கண்டு களிக்க விரும்புகின்றனர்.

சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கடைகள் இதற்குத் தடையாக உள்ளன. மேலும் இக்கடைகளினால் கோவிலின் புனிதத் தன்மை கெடுவதோடு இங்கு சில சமூக விரோதச் செயல்பாடுகளும் இடம்பெறுகின்றன.

எனவே இக்கடைகளை வேறு ஒரு தகுந்த இடத்திற்கு மாற்ற வேண்டும் என 2019 மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப் பட்டது எனினும் இம்முடிவு இது வரையிலும் செயற்படுத்தப்படவில்லை.

ஆகவே இதனை அமுல்படுத்தி ஆலயததின் அழகையும் புனிதத்தையும் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.