ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஷ்டியை வலியுறுத்தி வடக்கு -கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் குறிப்பிட்டிருந்தால் அந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிசீலனைசெய்யும்.’ இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.


கிளிநொச்சியில் நேற்று நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய
கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘ஓகஸ்ட் மாதம் 10 ,11 ஆம் திகதிகளில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடி
தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது தேர்தல் விஞ்ஞானத்தில் சமஷ்டியை வலியுறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதா என்று முடிவு எடுக்கப்படும்.’ – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையையே நடத்த முடியாதவர் என்று
சுமந்திரன் குறிப்பிட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது,
‘எமது கட்சியைச் சேர்ந்தவரின் கருத்துக்கு வியாக்கியானம் வழங்குது சரியான
விடயம் அல்ல. எனினும், இன்றைய காலச் சூழல் அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்ல வேண்டும். அதனை விட்டு ஒற்றுமையைக் குழப்பிப் பேசிக்கொண்டிருந்தால் அடிப்படை அரசியலைக் கொண்டு செல்வதில் பிரச்சினை உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கில் பிள்ளையானை நம்பி பொலிஸ் அதிகாரம் கொடுக்கலாமா என்று அன்று
கேட்டிருந்தார்.
அதற்காகவே பொலிஸ் அதிகாரம், நிதி அதிகாரம் வழங்குமாறு கோரி
வடக்கில் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனைக் களமிறக்கினோம். எல்லோருடைய விருப்பத்திலேயே அந்தத் தெரிவு இடம்பெற்றது.’ – என்றார்.