வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளதுடன், இதன் விளைவாகத் தங்க நகைகள் அடகு வைக்கப்படுவதும் வேகமாக அதிகரித்துள்ளது.2019ஆம் ஆண்டில் சுமார் 210 பில்லியன் ரூபாவாக இருந்த அடகு முற்பணங்களின் நிலுவைத் தொகை, மார்ச் 2024 ஆண்டில் 172% அதிகரித்து 571 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் ஜூன் 30, 2024 அன்று அல்லது அதற்கு முன் உரிமம் பெற்ற வங்கிகளிலிருந்து தனிநபர் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பெற்ற 100,000 ரூபாவுக்கு அதிகமாகாத அடகு முற்பணங்களுக்கு, ஆண்டுக்கு அதிகபட்சமாக 10%க்கு உட்பட்டு, வட்டி மானியத்தை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.