( ஐ. ஏ. காதிர் கான் )

   ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி, எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், அதன்படி ஓகஸ்ட் நடுப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் நேற்று (20) தெரிவித்ததாக, “சன்டே டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.

   இதன்பிரகாரம், முன்பு குறிப்பிடப்பட்டது போல் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதிக்கு பதிலாக, செப்டம்பர் 21 ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பின்படி,  தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, 16 முதல் 21 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் பெறப்பட வேண்டும். மேலும், 28 முதல் 42 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம், தேர்தல் நடத்துவதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகபட்சமாக 63 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.

   இந்த நிலையில், விரைவில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் தினத்தை அறிவிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு  அரசியல் கட்சிகள், தேர்தல்கள் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் ஆகியன இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. 

   கடந்த (17) புதன்கிழமை முதல், வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நாள் குறித்த அறிவிப்பை வெளியிட, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.

   இதேவேளை, “அரசியல் கட்சிகளும் ஏனைய குழுக்களும் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே அறிவிக்கக் கோருவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிடுவதாகக் கருதப்படுகிறது” என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, “சண்டே டைம்ஸ்” ஸிடம் தெரித்ததாக, அப்பத்திரிகை மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.