(வி.ரி.சகாதேவராஜா)


திருவிழாக் காலங்களில் ஆலயவளாகத்தில் நடத்தப்படும் உணவுக்கடைகள் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.


வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது கடந்த திங்கட்கிழமை திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி உற்சவமானது எதிர்வரும் 18 ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி ஓகஸ்ட் 04 ஆம் திகதி ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.


இந்தக் காலப் பகுதியில் ஆலயத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நலன்புரி சேவைகள் தொடர்பாக திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களதும் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதிஎஸ்.நிருபா, திருக்கோவில் பிரதேசசுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.மோகனகாந்தன், ஆலய பரிபாலன சபைத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ்,
திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் திருமதி வீரபத்திரன, திருக்கோவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன், கிராம சேவைக்கு பொறுப்பான நிர்வாக உத்தியோகத்தர் என்.கந்தசாமி மற்றும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், திருக்கோவில் பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள், மற்றும் அதன் உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்
எனப் பலரும் கலந்து கொண்டனர்.