No.

பாழடைந்துள்ள மருதமுனை மக்கள் மண்டபத்தை புனரமைத்து பாவனைக்கு விட நடவடிக்கை.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கடந்த பல வருடங்களாக பாழடைந்து கவனிப்பாரற்றுக் காணப்படுகின்ற மருதமுனை மக்கள் மண்டபத்தை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.

அண்மையில் கல்முனை மாநகர ஆணையாளராக பொறுப்பேற்று ஒரு சில தினங்களிலேயே இரு மாடிகளைக்  கொண்ட இந்த மண்டபத் தொகுதியினதும் அதன் சுற்றுச்சூழலினதும் அவல நிலையை கவனத்திற் கொண்ட அவர், அதனை உடனடியாக சீர்செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு விடுவதற்கு தீர்மானித்திருந்தார்.

இதற்கு அமைவாக குப்பை கூளங்களாலும் காடு வளர்ந்தும் காணப்படுகின்ற மருதமுனை மக்கள் மண்டப வளாகம் கடந்த சில தினங்களாக கல்முனை மாநகர சபையினால் துரிதமாக துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது. இதனை பராமரிப்பதற்கென ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். புனரமைப்பு வேலைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதையடுத்து விரைவாக இந்த மண்டபத்தை மக்கள் பாவனைக்கு விடுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.