வீரமுனை கிராமத்திற்கான  நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் -வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பாறுக் ஷிஹான்

வீரமுனை கிராமத்திற்கான  நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில்   தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர்  எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வீரமுனை கிராமத்திற்கான  நுழைவாயிலில் வரவேற்பு வளைவு  அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான தடையுத்தரவொன்றினை கடந்த 15ஆம் திகதி  சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.

வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைப்பதான நிகழ்வானது இனமுரண்பாட்டை இனவன்முறையினை ஏற்படுத்தும் என சம்மாந்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு குறித்த தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

மேற்குறித்த வழக்கு புதன்கிழமை(19)    சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.கருணாகரன் முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன் போது  மன்றில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்  சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.

இதன்போது இரு சாராரின் விண்ணப்பங்கள்  சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த  நீதிவான் குறித்த வழக்கினை   எதிர்வரும் 27ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தார்.

மேலும் இனமுரண்பாடுகள் ஏற்படும் இனக்கலவரம் ஏற்படும் என்ற வகையில் தடையுத்தரவினை பொலிஸார் கோரியிருந்தபோதிலும் அவ்வாறு ஏற்படுத்துவார்கள் என்ற சந்தேகிக்கப்படும் நபர்களை கைதுசெய்யாது இவ்வாறான கட்டளைகளை பெற்றிருப்பதானது அடிப்படையற்றது என்பதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஊடகங்களிடம் சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

செய்திப்பின்னணி

சம்மாந்துறை பிரதேசத்தில் சட்டரீதியாக அனுமதி பெறாமல்வீரமுனை கிராமத்திற்கான  நுழைவாயில் வரவேற்பு வளைவு எனும் பெயரில் கோபுரம் ஒன்று அமைப்பதற்கு எதிராக இரண்டு நபர்களினால் முறைப்பாடு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (14) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நௌபரால் மன்றிக்கு செய்யப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கடந்த சனிக்கிழமை (15) சம்மாந்துறை பொலிஸ் பிரதேசத்திற்க்குட்ப்பட்டதும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உட்பட்ட சம்மாந்துறை ஆண்டியடி சந்தி எனும் இடத்தில் வீரமுனைக்கு செல்லும் வீதியில் வீரமுனை பிரதேசவாசிகளால் வரவேற்பு கோபுரம் ஒன்று அமைப்பதற்க்கு அடிக்கல் நாட்டு விழாவினை நடாத்துவதனால் தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்று ஏற்படுவதற்க்கு சாத்தியமுள்ளதாலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தல் மற்றும் சமாதானகுலைவு ஏற்ப்படக்கூடிய சாத்தியமுள்ளதாலும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட கூடிய சாத்தியமுள்ளதாலும் இவ் நிகழ்வை நடாத்துவது உசிதமானது அல்ல என்பதனால் இந்த நிகழ்வினை நடத்தாமல் நிறுத்துமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன்  வீரமுனை கோவில் தலைவர் ராஐ கோபால்   கிராம உத்தியோகத்தர் பிரதீபன்  உள்ளிட்டோருக்கு  வீரமுனை கிராமத்திற்கான  நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக புதன்கிழமை  (19) சம்மாந்துறை பொலிஸாரினால் மன்றிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.  குறித்த அறிக்கை தொடர்பான விசாரணையை மேற்கொண்ட போது எதிர்வரும் 2024.06.27 வரை தொடர்ந்து இடைக்கால தடையுத்தரவு நீடித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.