கிழக்கில் 700 ஆசிரியர்களை நியமிக்க ஆளுநர் நடவடிக்கை;
-கல்வி அமைச்சர் சுசில் அனுமதி
(அபு அலா,ஏயெஸ் மெளலானா)
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அனுமதி வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை இன்று திங்கட்கிழமை (24) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வனுமதி வழங்கப்பட்டிருப்பதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கடந்த சில மாதங்களாக செந்தில் தொண்டமானால் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு தேவையான அனுமதிகளை அமைச்சர் சுசில், ஆளுநருக்கு வழங்கியுள்ளார்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தெரிவு செய்யப்படாத உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளின் நியமனம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

