மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் விரைவில் மின்வெட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக மின் பொறியிலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் ஓரளவு மின்சாரத்தை சேமிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படாவிட்டால் எதிர்காலத்தில் பாரியளவில் மின்தடை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டாலும் அதனை சிக்கனமாக பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கவில்லை எனவும் மக்கள் வழமை போன்று தாரளமாக மின்சாரத்தை பயன்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழைய குளிர்சாதன பெட்டிகளுக்கு பதிலாக புதியவற்றை கொள்வனவு செய்தல், ஒரே தடவையில் பல ஆடைகளை இஸ்தீரி செய்து வைத்துக்கொள்ளல் போன்ற ஆலோசனை வழிகாட்டல்கள் பின்பற்றப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தின் பின்னர் ஏற்படக்கூடிய மழையை கருத்திற் கொண்டுதொடர்ச்சியாக மின்சாரம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் எனினும், மூன்று மின் உற்பத்தி நிலையங்களுக்கு மட்டுமே மழை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.