அம்பாறை மாவட்டத்தில் புத்தாண்டுக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தல் சூடுபிடிக்கிறது!

(வி.ரி. சகாதேவராஜா )

அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை  தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் புத்தாண்டுக்கு பின்னர் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகின்றன.

குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் தற்போதுதான் பிரசாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

வேட்பாளர்கள் வட்டாரரீதியாக தமது ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று ஆதரவு கோரி வருகின்றனர். சில இடங்களில் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன.

தமிழர் பிரதேசங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, என்பிபி  போன்ற கட்சிகள் மற்றும் சுயேட்சை அணிகளிடையேயும் கடும் போட்டிகள் நிலவுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 19 கட்சிகளின் 122 வேட்புமனுக்கள் மற்றும் சுயாதீன குழுக்களால் 24 வேட்புமனுக்கள் மொத்தமாக 146 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றில் 19 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயாதீன குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தி, ஆகிய கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகின்றது.

சம்மாந்துறையில் இரு கட்சி ஆதரவாளர்களிடையே மோதல் இடம்பெற்றதென முதல்  பதிவு செய்யப்பட்டது.

இம் முறை அதிகமான சுயேட்சைக்குழுக்கள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசியற் கட்சிகளின் ஆதரவாளர்கள் கட்சி மாறும் படலங்களும் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.