அம்பாறை மாவட்டத்தில் 18 சபைகளுக்கு 44 வேட்புமனுக்கள்!
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 20 அரசியல் கட்சிகளும், 24 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான சிந்தக அபேவிக்கிரம தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாறை நகர சபை, காரைதீவு,திருக்கோவில், அட்டாளைச்சேனை, இறக்காமம், தமண, உகன, நாமல் ஓயா, மஹா ஓயா, பதியத்தலாவ, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில், ஆலையடிவேம்பு, லகுகல, நாவிதன்வெளி, ஆகிய 18 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 வது உள்ளூராட்சி சபையான தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் 25 26 27 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது
20 வது சபையான கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் இம்முறை நடைபெறமாட்டாது.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, ஈ.பி.டி.பி ஆகிய பிரதான கட்சிகள் உட்பட சுயேச்சைக் குழுக்களும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இம்முறை அதிகமான சுயேச்சைக்குழுக்கள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய 4 தேர்தல் தொகுதிகளிலும் 20 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் கல்முனை மாநகர சபை தெஹியத்தக்கண்டிய பிரதேச சபை தவிர்ந்த 18உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.