சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது!
காரைதீவில் புதிய உதவிபொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண.
(வி.ரி.சகாதேவராஜா)
“சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. முளையிலேயே கிள்ளி எறிய பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற மக்கள் பாதுகாப்பு உபதேசக்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கரைப்பற்று பொலிஸ் பிராந்திய புதிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண தெரிவித்தார்.
மேலும், சமுகத்தில் அவ்வப்போது எழும் சட்டவிரோத குற்றச்செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு அவசியம். அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை என்றார்.
காரைதீவுப்பொலீஸ் பிரதேசத்திற்கான மக்கள் பாதுகாப்பு உபதேசக்குழுவின் கூட்டம் நேற்று (19) புதன்கிழமை காரைதீவு பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜகத் தலைமையில் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
அங்கு தந்தநாராயண மேலும் கூறுகையில்:
சூப்பர் முஸ்லிம் குழுவினர் நபிகள் நாயகம் அல்லது குர்ஆன் காட்டிய வழியில் ஒருபோதும் நடப்பதில்லை. மருத்துவர் ரைஸ் தலைமையிலான ஒரு குழுவினர் இளைஞர் குழுவை திரட்டி இந்த சமூக விரோத செயற்பாட்டை முன்னெடுப்பதாக எங்களுக்கு தெரிய வந்திருக்கிறது.
புலிகள் மற்றும் சஹ்ரான் சம்பவங்கள் உங்களுக்கு தெரியும். அதற்கெல்லாம் இனி இடம் அளிக்க முடியாது.
நாட்டிலே நாங்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் நிம்மதியாக பாதுகாப்பாக வாழ வேண்டும்.
எனவே உங்கள் பிரதேசத்தில் வாழும் இளம் சமுதாயத்தினரை நாங்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் . பிரதேசத்தில் ஏதாவது குற்றச்செயல்கள் அல்லது பிழையான செயல்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக போலீஸ் பொறுப்பு அதிகாரிக்கு அல்லது எனக்கு அல்லது தகவல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.
மக்கள் சுதந்திரமாக நிம்மதியாக பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதற்காக பொலிசாராகிய நாம் சேவையாற்றிவருகின்றனர். இருப்பினும் பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் அது 100வீதம் சாத்தியமாகாது. எனவே பொதுமக்கள் பொலிசார் உறவு முக்கியமானது.
போதைப்பொருள் பாவனை, பெண் துஸ்பிரயோகம் மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு பொதுமக்களின் உதவி கட்டாயம் தேவை.
சட்ட விரோத செயற்பாடுகளையும் போதைப் பொருள் கடத்தலையும் காரைதீவு பிரதேசத்தில் முற்றாக தடை செய்யவேண்டும்.
தங்கள் உயிர்ப்பாதுகாப்பில் பொலிசாருக்கும் பங்குண்டு என்ற கடமைஉணர்வில் அதனைச்செய்கிறோம். பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும்.
பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம். இந்த உபதேசக்குழு உறுப்பினர்களை நான் தொடர்ந்து காணவிரும்புகிறேன். என்றார்.
பொலிஸ் கான்ஸ்டபிள் எஸ்.நாகேஸ்வரன் மொழிபெயர்ப்பு செய்தார்.
உபதேசக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.







