மு.கா தேசியப்பட்டியல் வெற்றிட்டம்; உள்ளுராட்சி தேர்தலில் செல்வாக்கை நிரூபிப்பவருக்கே முன்னுரிமை

-செயலாளர் நிஸாம் காரியப்பர் எம்.பி தெரிவிப்பு

(அஸ்லம் எஸ்.மெளலானா)

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி பதவியானது குறைந்தபட்சம் ஐந்து பிரதேசங்களுக்கு தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்பதுடன் இந்த உள்ளுராட்சி தேர்தலில் செல்வாக்கை நிரூபிப்பவருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் சரித்திரத்தில் மாத்திரமல்ல இலங்கை அரசியல் சரித்திரத்திலும் ஒரு தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

இது கட்சிக்கும் மக்களுக்கும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற விடயத்தில் முன்னுதாரணமாக அமைந்திருப்பது மாத்திரமல்ல முஸ்லிம் காங்கிரஸ் சரித்திரத்தில் கட்சியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 04 மாதங்களுக்குள் ராஜினாமா செய்த முதல் சந்தர்ப்பமுமாகும்.

இதனால் இக்கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் மிகவும் பெருமிதம் அடைந்துள்ளேன். கட்சி சார்பாக அவருக்கு நன்றிகளை தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். 

மேலும் இந்த பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை நிரப்பப்பட மாட்டாது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தங்களுக்கு அல்லது தங்களது பிரதேசத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்களுடைய செல்வாக்கை கட்சிக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும்.

அதாவது இதனை எதிர்பார்க்கும் கட்சி உறுப்பினர்கள் அந்தந்த பிரதேசத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, அதிகாரத்தை நிலைநாட்டி தங்களுக்கும் தங்களுடைய பிரதேசத்திற்கும் இப்பதவி வழங்கப்படுவதற்கு நியாயபூர்வமான உரித்து உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்- என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.