துறைநீலாவணை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பைகள்!!
குடியிருப்பாளர்கள் அசௌகரியம்!
யார் கவனிப்பது? மக்கள் திண்டாட்டம்!!
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட துறைநீலாவணை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பெரியநீலாவணைச் சந்தியில் இருந்து துறைநீலாவணை நோக்கி செல்லும் பிரதான வீதியின் இடப்பக்கமுள்ள குளக்கரையில் தினமும் இத்தகைய குப்பைகள் இனந்தெரியாதோரால் கொட்டப்பட்டு வருகிறது.
துறைநீலாவணைக் கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்எருவில் பற்று பிரதேசத்திலுள்ள வருகிறது.
ஆனால் அக் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் இடப் பக்கத்தில் உள்ள குளங்கள் வயல்கள் கல்முனை மாநகர சபைக்குள் வருகிறது.
இதனால் இக் குப்பை பிரச்சினையை யார் கவனிப்பது? யாரிடம் முறையிடுவது என்பது தொடர்பாக மக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர்.
அங்கு குப்பை கொட்ட வேண்டாம் என்று மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை அறிவித்தல் பலகை போட்டுள்ளது. எனினும் இது தொடர்கிறது.
நேற்று முன்தினம் அங்கு குப்பைப் பொதிகளை வீசிய போது ஒருவர் கையும் மெய்யுமாக இளைஞரால் பிடிபட்டார். வீசிய குப்பைகளை மீள அள்ளச் செய்த இளைஞர்கள் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் இனமுறுகலையும் தோற்றுவிக்கும் அபாயம் உள்ளது எனக் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள குடிமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் அந்த சூழல் பாதிக்கப்பட்டு மாசடைந்து கொண்டிருக்கின்றது.
இதனை அப்பகுதி குடியிருப்பாளர்கள் பல தடவைகள் கல்முனை மாநரசபையிடமும் பொதுச் சுகாதார பரிசோதகரிடமும் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அங்குள்ள குடியிருப்பாளர் பூ.நவரெத்தினராசா தெரிவித்தார்.
நேற்று மற்றுமொரு குடியிருப்பாளர் எஸ்.சபேசன் இச்சீர்கேடு தொடர்பாக புகார் தெரிவித்தார்.
இப்படியான சூழலில் நேற்றும் கூட அங்கு மாட்டுக் கழிவுகள் ஆட்டு கழிவுகள் கோழிக்கழிவுகள் அங்கு வீசப்பட்டன.
இது அந்த சூழலை மாசுபடுத்துவதோடு மக்களுக்கு நோய்களையும் உருவாக்கி வருகின்றது.
குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கு கல்முனை மாநகர சபை அல்லது மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை நடவடிக்கை எடுக்குமா என்று அந்த மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்


