ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது கல்முனைக்குடி நபர் கைது!

பாறுக் ஷிஹான்

வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் 31 வயது  சந்தேக நபரை ஐஸ்  போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில்  கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை புறநகர் பகுதியில்  புதன்கிழமை (05) கல்முனை விசேட அதிரடிப்படையினர்  ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயதுடைய சந்தேக நபரை கைது செய்தனர்.

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின்  அடிப்படையில் தேடுல் மேற்கொண்ட நிலையில் 1 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  இவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் கல்முனைக்குடி 02  கடற்கரை பள்ளி வீதியைச் சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த கைது நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஜி.எஸ்.சமந்த டி சில்வாவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் ஆகியோர் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு கைதான சந்தேக நபர் இதற்கு முன்னர் பல தடவைகள் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டவர் என்பதுடன்   மேலதிக விசாரணைகளை   கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.