73 வயதாகும் ரஜினிகாந்த், செப்டம்பர் 30ஆம் தேதி இரவு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு அங்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் விகடன் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இன்று பரிசோதனைகள் மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.

எனினும், ரஜினிகாந்த் எதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ரஜினிகாந்த் விரைந்து நலம்பெற விழைகிறேன்,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி, அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்ககத்தில் ‘கூலி’ படத்தில் நடித்துவருகிறார்.