கர்மயோகி மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீ!

இன்று சனிக்கிழமை நடைபெறும் அவரது திருவுருவச் சிலை திறப்பு விழாவையொட்டிய சிறு கட்டுரை.

உலகளாவிய இராமகிருஷ்ண மிஷனுக்கு மட்டக்களப்பு மாநிலம் உவந்தளித்த துறவிகளில் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீயும் ஒருவர் ஆவார்.

மட்டக்களப்புத் தமிழகம் தந்த அற்புதமான துறவி. சேவையின் சிகரம் எளிமையின் வடிவம் . காரைதீவு மண் ஈன்றளித்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் மற்றும் சுவாமி நடராஜரானந்தர். அவர்களுக்கு அடுத்ததாக கிழக்கு மண்ணில் தோன்றி அரிய சேவை செய்தவர் சுவாமி ஜீவனானந்தர்.” என்னை இயக்குபவன் இறைவனே. நான் ஒரு அனாமதேயம்” என்று கூறி அனைவரையும் கவர்ந்த மாமனிதர்.

அவர் மட்டக்களப்பில் வலையிறவு என்னும் கிராமத்தில் 22,06.1925ஆம் ஆண்டு பிறந்தார்கள் .பெரும் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து சிவானந்தாவிலே கல்விகற்று சுவாமிகளின் பின்னணியிலே வளர்ந்து “சீனிவாசகம்” என்ற பெயரோடு வாழ்ந்து துறவி யானார். இ.கி.மிசனில் இணைந்து கொண்ட அவர்கள் கல்லடி ஆசிரமம் இன்று சிறப்பு பெற்று மிளிர்வதற்கு ஆணிவேராக திகழ்ந்தார்.
கல்லடி ஆச்சிரமம் நாடளாவிய ரீதியில் பேசப்படுவதற்கு மிகுந்த அர்ப்பணிப்பான சேவையுடன் கால்கோளிட்டவர் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீ என்றால் மிகையில்லை.

அவர் கல்லடி ஆச்சிரமத்தில் இருந்தகாலை 04.02.2006 ஆம் ஆண்டு புகழுடம்பு எய்தினார்.


” நான் ஒரு அனாமதேயம் என்னை இயக்குபவன் இறைவனே “என்ற வாசகத்தை சொல்லி இவர் சேவை செய்த அளப்பரியது.

அவர் ஒரு உன்னதமான மனிதர்.

மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மடாலயத்தின் முன்னாள் தலைவர் கர்மயோகி மாபெரும் துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜி மஹராஜ் இன் திருவுருவச் சிலை (24) சனிக்கிழமை கல்லடி நாவற்குடாவில் திறந்து வைக்கப்படவிருக்கிறது.
சுவாமி ஜீவனானந்த ஜீ நூற்றாண்டு விழாச் சபை நாவற்குடா இந்து கலாசார மண்டப முன்னாலுள்ள பிரதான வீதியில் நிறுவிய அச் சிலையை இராமகிருஷ்ண மிஷன் கொழும்பு மூத்த துறவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி இராஜேஸ்வரானாந்தா ஜீ இன்று காலை திறந்து வைக்க விருக்கிறார்.

அவ்வமயம் தஞ்சாவூர் இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த ஜீ மகராஜ் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மகராஜ் மட்டக்களப்பு கல்லடி ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுர்ச்சிதானந்த ஜீ மகராஜ் முன்னிலையில் இத் திறப்பு விழா நடைபெறவிருக்கிறது.
அதன் பின்னர் ஒரு மணி நேரம் சுவாமிகளின் நினைவு மீட்டல் நிகழ்வு கலாச்சார மண்டபத்தில் நடைபெறும் என நூற்றாண்டு விழா சபைச் செயலாளர் கண.வரதராஜன் தெரிவித்தார்.

சுவாமிகளின் திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்.

விபுலமாமணி வித்தகர்
வி.ரி. சகாதேவராஜா
( சிவானந்தியன்)
காரைதீவு