இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் கட்சி, நிற, இன பேதமின்றி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அணிதிரண்டுள்ளோம் என்று அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) தெரிவித்தார்.

அநுராதபுரம், சல்காது மைதானத்தில்  நடைபெற்ற முதலாவது ‘இயலும் ஸ்ரீலங்கா’ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியதில்லை.

ஆனால், இம்முறை கட்சி, நிற, இன பேதமின்றி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அணிதிரண்டுள்ளோம். மக்கள் குறித்தும், நாடு குறித்தும் சிந்திக்கும் அனைவரும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தத் தீர்மானித்துவிட்டனர்.

நாடு மிகவும் பாதாளத்தில் வீழ்ந்தது. பல மைல் தூரம் காஸ் வரிசை இருந்தது. பல மைல் தூரம் எரிபொருள் வரிசை இருந்தது. மின்சாரம் தடைப்பட்டிருந்தது. பஞ்சம் வரும் என்றும் மக்கள் அஞ்சினார்கள்.

இருந்த ஜனாதிபதி தப்பியோடினார். எதிர்க்கட்சித் தலைவர் ஒளிந்துகொண்டார். நாடு நிர்க்கதிக்குள்ளானது. ‘அரகலய’ போராட்டத்துக்குச் சென்றபோது எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை விரட்டி விரட்டி அடித்ததைப் போல் மீண்டும் விரட்டியடித்து விடுவர் என்ற அச்சத்திலேயே அவர் நாட்டைப் பொறுப்பேற்க முன்வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.