கதிர்காம யாத்திரைக்கான காட்டுப்பாதை திறக்கும் சர்ச்சைக்கு தீர்வை தந்த ஆளுநருக்கு நன்றி – கென்றி மகேந்திரன்

கதிர்காம பாத யாத்திரைக்காக காட்டுப்பாதை திறப்பது எதிர்வரும் இரண்டாம் திகதி எனும் அறிவித்தல் வந்ததையடுத்து ,பக்தர்கள் கடும் கண்டனத்தையும் ,கவலையையும் தெரிவித்ததுடன், அதனால் தாம் எதிர்கொள்ளும் அசௌகரியங்களையும் விபரித்திருந்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை கவனத்தில் எடுத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், காட்டுப்பாதையை எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்க நடவடிக்கை எடுத்து உத்தியோகபூர்வமாகவும் நேற்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக ரெலோ கட்சியின் உப தலைவர் கென்றி மகேந்திரன் ஆளுநருக்கு நன்றி தெரிவித்து இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கதிர்காம காட்டுப் பாதை இவ்வருடம் திறப்பது சம்பந்தமாக இந்து அமைப்புக்களினதும், பாதயாத்திரை செல்லும் அடியார்களினதும் கோரிக்கைக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் ஊடாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உத்தியோகபூர்வமாக ஆளுநரால் இம்மாதம் 30 திகதி கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்படும் என அறிவித்தமைக்கு, கிழக்கு மாகாண ஆளுநருக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். என தெரிவித்திருந்தார்.