பாராளுமன்றத் தேர்தல் முறைமையினை மாற்றியமைப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சார்பில் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தின்படி, 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் தொகுதி அளவில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

எஞ்சிய 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அல்லது மாகாண மட்டத்தில் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில், அமைச்சரவையின் அனுமதியை வழங்குமாறு நீதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசியலமைப்பின் படி, 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் விகிதாசார அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

எஞ்சியுள்ள 29 பாராளுமன்ற உறுப்பினர்களும் காட்சிகள் பெற்ற வாக்குகளின் வீதத்திற்கு ஏற்ப அந்தந்த காட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.