சுகாதாரமற்ற  உணவகங்களுக்கு எதிராக 70,000 ரூபா  தண்டப்பணம் அறவீடு
  

  பாறுக் ஷிஹான்

நோன்பு காலத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீனின் நெறிப்படுத்தலில்  செவ்வாய்க்கிழமை(25)  திடீர் உணவுப் பரிசோதனை அம்பாறை மாவட்டத்தின்  சம்மாந்துறை, நிந்தவூர், மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது  சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் கல்முனை மாநகர் பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  5 உணவகங்களுக்கு எதிராக   கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு உணவின் தரம் பற்றி தகவல் வழங்கப்பட்டது.

மேலும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  மதன் தலைமையிலான குழுவினரினால் சம்மாந்துறை பிரதேசத்தில் தீடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு   5 உணவகங்களுக்கு எதிராக   சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு உணவின் தரம் பற்றி தகவல் வழங்கப்பட்டன.அத்துடன் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட  சுகாதாரமற்ற 5  உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சம்மாந்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 70,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.