செட்டிபாளையத்தில் மாவட்ட மதுப்பாவனையாளர் புனர்வாழ்வு மையம்
( வி.ரி. சகாதேவராஜா)
வறுமை, வேலையின்மை போன்றவற்றாலும் உளநல சவால்களாலும் அதிகரித்து வரும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்காக புனர்வாழ்வு மையம் அமைப்பதற்கான அவசியம் கருதி அதற்கான ஆலோசனைகளும் திட்டமிடலுக்குமான கலந்துரையாடல் ஒன்று குறித்த மையம் அமையவிருக்கும் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர். ஆர். முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மருத்துவ வைத்திய நிபுணர் பேராசிரியர் எம். உமாகாந்த், உளநல வைத்திய நிபுணர் மருத்துவர் எம். கணேசன், உளநல வைத்திய நிபுணர் மருத்துவர் ஆர். கமல்ராஜ்., சுகாதார வைத்திய அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட உளநலமேம்பட்டுக்குழுவினர், போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள், பணிப்பாளர் பணிமனையின் பொறுப்பு வைத்திய உத்தியோகத்தர்கள்,, உளவியலாளர், ஆலோசகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிலையத்திற்கான சிகிச்சை மற்றும் மருத்துவ வசதி முறைகளின் மேம்பாட்டு நடவடிக்கைகைள், நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள், வைத்தியர்கள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட மருத்துவ சேவை பணியாளர்களின் ஆளணித்தேவை, மது பழக்கவழக்கம் மற்றும் உளநல ஆரோக்கியம் சம்பந்தமான சிக்கலானவற்றை கையாள்வதற்கான பயிற்சித்திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் ஆலோசிக்கப்பட்ட இக்கலந்துரையாடலை மாவட்ட உளநலப்பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் டான் சௌந்தரராஜா அவர்கள் திறம்பட ஒருங்கிணைத்திருந்தார்.
இந்த புனர்வாழ்வு மையம், மட்டக்களப்பு சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரும் என்பதோடு, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் என நம்பிக்கை கொள்ளலாம்.